ஜனாதிபதி விளாடிமிர் புதினை கொல்லும் முயற்சியில் கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன், தனது முயற்சியில் தோல்வியுற்று உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் சிட்டாடலில் உள்ள புதினின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அவை மின்னணு பாதுகாப்புகளால் முடக்கப்பட்டதாகவும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை ஒரு "திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை" என்று கருதுவதாக கிரெம்ளின் கூறியுள்ளது.
"இரண்டு ஆளில்லா வான்வழி ட்ரோன்களை கிரெம்ளினை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டதாகவும், இராணுவம் மற்றும் சிறப்புச் சேவைகள் ராடார் போர் அமைப்புகளைப் பயன்படுத்திச் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, அந்த ட்ரோன்கள் செயலிழக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவும், ஜனாதிபதியின் உயிரைக் கொல்லும் முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம்.
விளாடிமிர் புடினுக்கு காயம் ஏற்படவில்லை, மேலும் கட்டிடங்களுக்குப் பொருள் சேதம் எதுவும் இல்லை. ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்த போது ரஷ்ய அதிபர் வளாகத்தில் இல்லை.பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க ரஷ்ய தரப்புக்கு உரிமை உள்ளது, எப்போது, எங்குப் பொருத்தமாக இருக்குமோ அப்போது செய்வோம். கிரெம்ளின் மாளிகை பகுதியில் ட்ரோன்களின் துண்டுகள் சிதறிக்கிடக்கின்றன, ஆனால் உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் எதுவும் இல்லை’’ என்று கிரெம்ளின் மாளிகை அறிக்கை கூறியுள்ளது.
புதின் தற்போது மாஸ்கோ நகருக்கு வெளியேயுள்ள ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்திலுள்ள தன் பிரமாண்ட பங்களாவான நெவோ- ஒயொவாவில் தங்கியுள்ளதாகவும், அதிபர் புதினை கொல்ல உக்ரைன் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா தரப்பில் கூறியுள்ளனர்.
ஆனால், கிரெம்ளின் ட்ரோன் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’எனக் குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது.
ரஷ்யா நாடு உக்ரைன் மீது கடந்தாண்டு போரிட்டது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷ்யா அதனைப் பொருட்படுத்தவில்லை.