பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பந்தியால் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70) மீது அந்நாட்டு அரசு ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, அந்த வழக்கில் ஆஜராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரானார். ஆனால், அவரை சுற்றி வளைத்த துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இதனிடையே, இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில், நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து, இம்ரான் கான் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.