பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், அதிகமாக சொத்து சேர்த்தல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு இம்ரான் கான் இன்று வந்தார். அப்போது, அவரை கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக அவரது காரை சுற்றி வளைத்து துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர். இம்ரான் கானை கைது செய்ய முயன்ற போது, அவருடைய வழக்கறிஞர் தடுக்க முயன்றார். அப்போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டது.
இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தை விமர்சித்துப் பேசிய விவகாரத்தில் கைது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தவும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வாணி கூறுகையில்,"இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் ராணுவ ரேஞ்சர்கள் கடத்தி சென்றுவிட்டதாக" குற்றம் சாட்டியுள்ளார்.