பின்லாந்து: கணவரை விவாகரத்து செய்யும் பிரதமர் - பதவி விலகும் நிலையில் திடீர் அறிவிப்பு
பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சன்னா மரின் (37). கடந்த 2018 ஆம் ஆண்டு மார்க்கஸ் என்பவரை சன்னா மரின் காதலித்து வந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தவுடன் 2020 ஆம் ஆண்டு, சன்னா மரின் தனது காதலர் மார்க்கஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகத்து செய்ய பிரதமர் சன்னா மரின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 3 வருட திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தின் தனித்தனி பக்கத்தில் ‘19 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.
நாங்கள் எப்போதும், சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம். ஒன்றாக இளமை பருவத்தில் நுழைந்தோம். எங்களுடைய அன்பு மகளுக்கு நல்ல பெற்றோராக இருப்போம்’ என குறிப்பிட்டுள்ளனர்.
பின்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சன்னா மரினின் எஸ்.டி.பி கட்சி தோல்வியடைந்தது. ஆனாலும் புதிய பிரதமர் பதவியேற்கும் வரையில் சனா மரின் பிரதமராக நீடிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தில் பிரதமராக பதவி வகித்தபோது சன்னா மரின் திருமணம் செய்த நிலையில் அதே பதவியில் இருந்து விலகும் முன்பாகவே அவர் விவகாரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்லாந்து வரலாற்றில் சன்னா மரின் மிகவும் இளமையான பிரதமர் ஆவார்.