போரில் இரு கால்களையும் இழந்த முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43). இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவருக்கு முழங்காலுக்கு கீழ் இரண்டு கால்களுமே கிடையாது. இவர் போரில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரரான ஹரி புத்தமகர் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை எட்டினார். இதனால் செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இவர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகர உச்சத்தை அடைந்த முதல் நபர் எனற வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்ற புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். 2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட மலைசிகரங்களில் ஏறுவதற்கு பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தடைவிதித்து, மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தனது திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு நடந்த விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் புத்தமகர் உடல் ரீதியான சவால்களில் துவண்டு போகாமல் விடாமுயற்சியுடன் போராடி செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.