இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டுவிழா இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி அன்று தன்னுடைய 96 வயதில் காலமானதையடுத்து, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். இவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியிருந்தாலும் அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்தது. இந்நிலையில் மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. உலக நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்தின் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேருக்கு இவ்விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுகள் கழித்து நடக்கும் பாரம்பரிய விழா
இங்கிலாந்தில் இது போன்ற முடிசூட்டப்படும் பாரம்பரிய விழா கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டப்பட்டார். அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. இதனால் இங்கிலாந்து நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வில்லியம் தி கான்குவரர்தான் முடிசூட்டப்பட்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ் 40-வது மன்னர் ஆவார். இவருக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று முடிசூட்டுவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தான் நடைபெறுகிறது. இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
விழாவில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
இந்த பாரம்பரிய விழா பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையிலான ஊர்வலத்துடன் தொடங்கும். மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த சாரட் முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும். இது 70 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு இன்று பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்ததும் விழா ஆரம்பமாகும்.
700 ஆண்டு கால பழமையான இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அப்போது, ''கடவுளே மன்னரை காப்பாற்று!'' என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும். அதை தொடர்ந்து சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் 3-ம் சார்லஸ் உறுதிமொழி எடுப்பார்.
பின் 700 ஆண்டு கால பழமையான அந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டு மன்னரின் வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்போது பார்வையாளர்களிடம் இருந்து தங்கஇழைகளால் தயாரிக்கப்பட்ட திரைமூலம் அவரை மறைத்துக் கொள்வார்கள். அவரது தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்வார்கள். இது மன்னருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
பின்னர் மன்னருக்கு அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை மற்றும் அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். இறுதியாக ஆர்ச் பிஷப் மன்னர் சார்லஸின் தலையில் 2.23 கிலோ எடைகொண்ட செயின்ட் எட்வர்ட்டின் கிரீடத்தை வைப்பார். இது 1661-ம் ஆண்டிலிருந்து உள்ள ஒரு தங்கக் கிரீடம். இது லண்டன் கோபுரத்திலுள்ள மகுட நகைகளின் முக்கியப் பகுதியாகும். இது முடிசூட்டும் தருணத்தில் மன்னரால் மட்டுமே அணியப்படுகிறது. அதனை தொடர்ந்து முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையைக்கு மன்னர் செல்வார். பின் உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமரவைக்கப்படுவார்.
பின்னர் இதே போல் மன்னரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்படும். அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்படும். பின்னர் மன்னரும், ராணியும் தங்க முலாம் பூசப்பட்ட பாரம்பரிய சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்று மீண்டும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கே திரும்புவார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாடுகளிலிருந்து சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளார்கள். அதன்படி `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்து பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக், அவரது மனைவி அக்ஷரா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே முடிசூட்டு விழாவில் தீவிர பங்களிப்பை வழங்கும் இங்கிலாந்து ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மன்னர் சார்லசின் நன்றி பரிசாக பதக்கங்கள் வழங்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 4 லட்சம் சிறப்பு முடிசூட்டு விழா பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாம். பதக்கத்தின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவின் இரட்டை உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணைக்கவரும் வகையில் நடைபெறும் இந்த முடி சூட்டுவிழா டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.