தேநீர் பையில் இருந்து வெளியேறும் பில்லியன் கணக்கான மைக்ரோ, நானோ துகள்கள்! ஆய்வில் தகவல்...
ஒவ்வொரு பிளாஸ்டிக் தேநீர் பையில் இருந்து பில்லியன் கணக்கான மைக்ரோ மற்றும் நானோ துகள்கள் வெளியேறுவதாக கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், 4 வகையான பிளாஸ்டிக் தேநீர் பைகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 நிமிடங்கள் 95 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் பைகளை கொதிக்கும் நீரில் நனைத்தபோது முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இதன்படி, பிளாஸ்டிக் தேநீர் பைகளை கொதிக்கும் நீரில் நனைக்கும்போது, 10 பில்லியனுக்கும் அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் 3.1 பில்லியன் சிறிய நானோ பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீருக்குள் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களை நாம் வெறும் கண்களால் காண முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய துகள்களை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து கண்டறியப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட தேநீர் பைகள் பிளாஸ்டிக் அல்லது நைலான் மூலம் செய்யப்பட்டவை என்றும், பெரும்பாலும் இதுபோன்ற தேநீர் பைகள் முக்கோண வடிவத்தில் இருப்பதால் தேநீர் குடிப்பவர்கள் இலைகளை பையின் வழியாகப் பார்க்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.