ஏமன்: ரம்ஜான் நன்கொடைக்காக கூடிய கூட்டம் - 85 பேர் உயிரிழந்த சோகம்
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் ரம்ஜானுக்கு இலவச பொருட்கள் வாங்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டில் சானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் இலவச உதவித்தொகை மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இலவசம் எனத் தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அங்கு ஒரு பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் அடிப்பதாகக் கூட்டத்தில் தகவல் பரவி உள்ளது. இதனால் அங்குக் கூடி இருந்த மக்கள் சிதறி ஓட்டம் பிடித்துள்ளனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.