இதுகுறித்து சிறப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பான் பிரதமர் மீது பொதுக்கூட்டம் நிகழ்ச்சியின்போது, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள வயகமா என்ற பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா இன்று காலை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிகச் சத்தத்துடன் குண்டு வெடித்துப் பெரும் புகைமூட்டம் சூழ்ந்ததால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். குண்டு வீசப்பட்ட உடன் பிரதமரின் பாதுகாவலர்கள் அவரைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். மேலும் குண்டு வீசிய நபரை அங்கிருந்த போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் கொலை சம்பவத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது ஜப்பானின் தற்போதைய பிரதமர் மீது நடத்தப்பட்டுள்ள வெடிகுண்டு தாக்குதல் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் சிறப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.