பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பலத்த போலீஸ் பதுகாப்புடன் குண்டு துளைக்காத தலைக்கவசம் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டு பயணத்தில் முக்கியப் பிரமுகரிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்தக் கணக்கில் சேர்த்த வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன.
இதில் ஒரு வழக்கில் இம்ரான் கான் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவரது லாகூர் வீட்டில் கடந்த மாதம் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதற்காக இம்ரான் கான் வீட்டின் கதவை போலீசார் உடைத்து உள்ளே புகுந்தனர். இதில் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் மீது 3 வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அங்கு அவருக்கு ஜாமீனும் வழக்கப்பட்டது.
முன்னதாக பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாவலர்கள் புடை சூழ முகமே தெரியாத அளவுக்கு பக்கெட் வடிவில் புல்லட் ப்ரூப் ஹெல்மெட்டை தலையில் அணிந்து இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இதுதொடர்பான படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே சமயம் ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா?’ என பலர் விவாதிக்கவும் இது காரணமானது.