பெண்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானிற்கு சில உதவித் திட்டங்கள் வழங்குவதில் தற்காலிமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் பெண் உதவிப் பணியாளர்கள் மீதான தடையைக் கடந்த சனிக்கிழமை தலிபான் தலைமையிலான நிர்வாகம் அறிவித்தது.
பெண்கள் மார்ச் மாதத்திலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது . இதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர், மார்ட்டின் கிரிஃபித்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மனிதாபிமான பணிகளிலிருந்து பெண்களை தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் உடனடி உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெண் உதவிப் பணியாளர்கள் இல்லாமல் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாது என்பதால், பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.