தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பணமோசடி நடந்து வருவதாகவும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை சார்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி, ஜிபே ஆப் மோசடி என விதம்விதமான மோசடிகள் குறித்து அவ்வப்போது வீடியோவில் தோன்றி அலெர்ட் கொடுப்பது தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவின் வழக்கம். ஆனால், அவர் பெயரையே பயன்படுத்தி மோசடிக் கும்பல் ஒன்று பணமோசடியில் இறங்கியுள்ளதாக காவல்துறை அலெர்ட் செய்திருப்பதுதான் ஆச்சர்யம்.
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வருவது வழக்கமாக உள்ளது. ஒரு சிலருடைய புகைப்படத்தை பயன்படுத்தி தங்களுக்கு மிகவும் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபடுபவர்களை குறித்து பணத்தை இழந்தவர்கள் ஏமாந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல்வேறு வகையில் சைபர் கிரைம்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு புகைப்படத்தையே பயன்படுத்தி, அவர் போலவே பேசி சமூக வலைத்தளத்தில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இதில் சைலேந்திரபாபு, ‘தங்களுக்கு மிகவும் அவசரம் என்றும் உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் கூறுவது போல குறுஞ்செய்திகள் சமூக வலைத்தளத்தில் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த குறுஞ்செய்தி விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வருவதாக தெரிய வருகிறது. எனவே இதனை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.