சென்னையை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் இர்பான். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் பல்வேறு உணவகங்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சாப்பிட்டு பார்த்து நிறை மற்றும் குறைகளை கூறுவதை வழக்கமாக செய்து வருகிறார்.
இவருடைய திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் கோலாகலமாக நடந்தது. இதில் முக்கிய பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் மோதிய விபத்தில், பொத்தேரி அடுத்துள்ள கோனாதி முரளி நகரை சேர்ந்த பத்மாவதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பத்மாவதியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தும் விதமாக காரை ஓட்டி வந்த சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் (34) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து நடந்தபோது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி-யில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.