கடலூரில் மாமியார், மாமனார், சிறுவன் ஆகிய 3 பேருக்கும் சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்த பெண்ணை ஒரு வருடம் கழித்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவர் பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புது குப்பம் பகுதியைச் சேர்ந்த, வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரிஹரன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து மருமகள் கீதாவைக் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூருக்கு சென்று கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார், மாமனார், ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்துள்ளார்.
இந்த உணவைச் சாப்பிட்ட கீதாவின் மாமியார், மாமனார், பக்கத்து வீட்டுப் பிரபு என்பவரின் 10 வயது மகன் நித்தீஸ்வரன் ஆகிய 3 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் கீதாவின் கணவர் வேல்முருகன், மற்றும் குழந்தைகள் பிழைத்துக் கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்த மங்கலம்பேட்டை போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒன்றரை வருடம் கழித்து தற்போது கீதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஹரிஹரன் இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.