நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்: கட்சி பாகுபாடின்றி அனைவரும் வாரீர்..வாரீர்- அழைப்பு விடுத்த உதயநிதி

மாணவர்கள் நலன் கருதி கட்சி பாகுபாடின்றி நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் திரளாக பங்கு கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்குத்தொகை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 42 அரசு பள்ளி மாணவ, மாரணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கியும், 530 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களையும் வழங்கினார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின்
விழாவில் உதயநிதி ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, "தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவ, மாணவிகளின் உயிர்களை இழந்துள்ள நிலையில், நாளை திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் கட்சி பாகுபாடின்றி மாணவ, மாணவியர்கள் நலன் கருதி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com