வேலூர்: கணவர் ஏரியில் மூழ்கியதால் மனைவி விபரீத முடிவு - 2 குழந்தைகள் கதறல்

வேலூர் மாவட்டத்தில் கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
கணவன், மனைவி
கணவன், மனைவி

வேலூர் மாவட்டம், காட்பாடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கூலித் தொழிலாளியான ரஞ்சித்குமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் ஏரிக்கு குளிக்கப் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற ரஞ்சித்குமார் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டார்.

அவரது நண்பர்கள் ரஞ்சித்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பயனில்லாமல் மூழ்கி இறந்துபோனார். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பிறகு வீட்டிற்கு எடுத்து வரப்பட்ட கணவரின் உடலை பார்த்து, ‘இனி 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி காப்பாற்றப் போகிறேன் என தெரியலையே’ என்று இளவரசி கதறி அழுதுள்ளார்.

இறந்துபோன ரஞ்சித்குமாரின் மனைவி இளவரசி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இதற்கிடையே திடீரென இளவரசியை காணவில்லை. உறவினர்கள் உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பிறகு அதேப் பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் வந்துள்ளது. உறவினர்கள் பதறிப்போய் பார்த்தபோது காணாமல்போன இளவரசியின் சடலம் என தெரியவந்தது.

விசாரணையில் ‘கணவன் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளை எப்படி காப்பாற்றப் போகிறேன்’ என்ற விரக்தியில் இளவரசி விபரீத முடிவு எடுத்தது தெரியவந்தது.

பெற்ற தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கும் சம்பவம் காட்பாடி பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

குறிப்பு:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மைய எண்: 104

சினேகா தொண்டு நிறுவனம்:

எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com