காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் அப்பகுதியைச் சுற்றி 300 ஏக்கருக்கு விலை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் இருங்காட்டுக்கோட்டை, அமரம்மேடு, புதுநல்லூர் ஆகிய குடியிருப்புகளிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவு நீர் ஏரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோன்று இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்படும் தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த குப்பை கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றி வந்து ஏரிகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு, ஏரி நீர் மாசடைந்து காணப்படுகிறது. மாசடைந்த நீரை விலை நிலங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் புகார் கூறுகின்றனர்.
எனவே ஏரியில் கழிவு நீர் மற்றும் கழிவுப்பொருட்களை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஏரியினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.