கந்துவட்டி விவகாரத்தில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சினிமா இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்து வட்டி புகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு சினிமா பைனான்ஸ்சியர் முகுந்த் சந்த் போத்ரா கைது செய்யப்பட்டபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தனர்.
இதையடுத்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த் சந்த் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.அவரது மரணத்திற்கு பிறகு அவரது மகன் ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 15வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சுமத்திய இயக்குநர்ஆர்.கே.செல்வமணியும் ஆஜராகவில்லை.அவரது வக்கீலும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, ஆர்.கே செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.