வாலிபால் விளையாட்டை வேடிக்கை பார்த்த நபருக்கு நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சி பின்னணி

கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து கொலை செய்துள்ளனர்.
வாலிபால் விளையாட்டை வேடிக்கை பார்த்த நபருக்கு நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சி பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வாலிபால் விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த நபரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை அடுத்த கடைத்தெரு பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாலை நேரத்தில் வாலிபர்கள் வாலிபால் விளையாடுவது வழக்கம்.

இந்த நிலையில், கடைத்தெரு இளைஞர்களும் வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் வாலிபால் விளையாடி கொண்டிருந்த நிலையில் வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சிண்டு என்கிற மௌரி மற்றும் டேவிட், அப்பு மற்றும் பிரவீன் ஆகியோர் தலைக்கு மீறிய கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்பொழுது, அவ்வழியாக செல்வோரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வழியாக வந்துள்ளார் கோபாலகிருஷ்ணன் என்பவர் (50). இவர் தினமும் மாலை நேரத்தில் டீ அருந்திவிட்டு சிறிது நேரம் வாலிபால் விளையாட்டை பார்த்து செல்வது வழக்கம் அப்போது கஞ்சா போதையில் இருந்த நால்வரும் கோபாலகிருஷ்ணனை பார்த்து நீ ஏன் தினமும் இந்த பக்கம் வருகிறாய்? உனக்கு என்ன வேலை? என மீண்டும் வம்பிழுத்துள்ளனர்.

இதனால் சிரித்தவாறு கோபால கிருஷ்ணன் சென்ற நிலையில், கோபமற்ற நான்கு பேரும் நாங்கள் என்ன கேட்கிறோம்? நீ ஏன் சிரிக்கிறாய்? எனக்கூறி தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து கோபாலகிருஷ்ணன் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே கோபால கிருஷ்ணன் மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடனடியாக கோபாலகிருஷ்ணன் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக டேவிட் மற்றும் சிண்டு என்கிற மௌரியை கைது செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மிகவும் வெகுளி இதுவரை அவருக்கு திருமணமும் நடைபெறவில்லை யாருக்கும் எவ்விதமான தொல்லையும் கொடுக்காத நபர் பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com