நேரம் சரியில்லை எனக் கூறி குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்தவர் மது போதையில் கீழே விழுந்து பலியானார்.
சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் மலர். இவருடைய மகன் பாலமுருகன் (33). இவர் குருமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கார்த்தீஸ்வரி (4) என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் திருப்பூரில் மனைவி குருமாரியுடன் பனியன் நிறுவனங்களில் வேலை செய்தார். அப்போது பாலமுருகனுக்கு விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பாலமுருகன் மற்றும் குருமாரி ஆகியோர் ஜோசியம் பார்த்துள்ளனர். அப்போது நேரம் சரியில்லை. எனவே குடும்பத்தை விட்டு பாலமுருகன் பிரிந்து வாழ வேண்டும் என்று ஜோதிடர் ஆலோசனை கூறினார். இதையடுத்து பாலமுருகன் தனது மனைவி குருமாரி, மகள் கார்த்தீஸ்வரி ஆகியோரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக சாத்தூர் அருகே படந்தாலில் தனது தாயார் மலருடன் வசித்து வந்தார். இங்கு கூலி வேலை செய்த அவர், குடும்பத்தைப் பிரிந்த சோகத்தில் அடிக்கடி மது அருந்தியுள்ளார்.
சம்பவத்தன்று மது குடித்து விட்டு தாயார் மலரின் வீட்டுக்கு திரும்பிய பாலமுருகன் வீட்டு முன்பு திடீரென்று சரிந்து விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ’’நேரம் சரியில்லை என குடும்பத்தை விட்டுப் பிரித்து நல்லா இருக்க வேணும்னு இங்கு கூட்டி வந்தேன். இங்கேயும் வந்து வந்து சாகணுமா?’’ என்று அவரது தாயார் மலர் கதறி அழுதார். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-கார்த்தி