பேய் பிடித்திருப்பதாக கூறி 3 நாள் காய்ச்சலால் அவதிப்பட்ட 18 வயது சிறுமி திடீர் மரணமடைந்தார்.
விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி முருகலட்சுமி. இவர்களது மகள் 18 வயதான பிருந்தா. 9 ம் வகுப்பு வரை படித்த இவர் படிப்பு ஏறவில்லை என்று கூறி பட்டாசு ஆலையில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 3 நாள்களாக பிருந்தா காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது தாய் முருகலட்சுமி மெடிக்கலில் அவருக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், பிருந்தாவுக்கு காய்ச்சல் சரியாகவில்லை. எனவே பிருந்தாவுக்கு பேய் பிடித்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து அவரை தாயார் முருகலட்சுமி உள்ளூர் கருப்பசாமி கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீரு பூசினார். ஆனால், பிருந்தாவுக்கு உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த பிருந்தா திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிருந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது பற்றி சூலக்கர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.