தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை: தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை: தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

டாஸ்மாக் கடைகளில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக மது தான் அமைவதாகவும், சமீப காலங்களில் பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்ககூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்க உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் எளிதில் மதுவைப் பெற வகைச்செய்து விடும் என்பதால், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்க கூடாது எனவும், அதை மீறுவோரை தண்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், டாஸ்மாக் கடைகளுக்குள் தான் இந்தத் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்ற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது பெற வருபவர்களைக் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது எனவும் இதுசம்பந்தமாகச் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவில் எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com