திண்டுக்கல் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ்.இவர் கடந்த 2003ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மனைவி அன்னலட்சுமி. இவர் தனது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27.7.2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து அன்னலட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறைநேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.