கோவை ராம் நகர் பகுதி அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
இதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘8 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் துவங்கியுள்ளோம்.
மாணவிகள் பரிசோதனை செய்து கொள்ளலாம். மாணவிகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க முயற்சி எடுக்கப்படும்.
மோடி பயப்படுகிறார் என சொல்வது முதல்வரின் கற்பனை. டாஸ்மாக் பிரச்னை, சட்டம் ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவை குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள் தான்.
ஒவ்வொரு பிரச்னைக்கும் ஆளுநர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வருகிறது. மேடை நாகரீகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள்தான் திராவிட தலைவர்கள்.
ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது அவர்கள் வரம்பை மீறிப் போவதில்லை.
எனக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பி போல் சேர்ந்து கட்சியை வளர்த்து வருகிறோம். கோவை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சி முடிவு செய்யும்’ என்றார்.