திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி திடீரென சாலையில் பழுதாகி நின்றது. அப்போது அவ்வழியாக நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகனம் சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியை ரோந்து காவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே சாலையில் ஓசூரிலிருந்து சென்னை துறைமுகத்திற்குச் சென்ற கண்டெய்னர் லாரி , சாலையில் நின்று கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்களின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நெடுஞ்சாலைத் துறை ரோந்து காவலர்களின் வாகனம் அப்பளம் போல் நெருங்கியது. இந்த விபத்தில் இரவு ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றி சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் சாலையைக் கடக்க முயன்ற போது அவர் மீது அரசு பேருந்து மோதியதில் அந்நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.