மத்திய அரசு 'கிரெய்ன்ஸ்' என்கிற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் தங்கள் விவசாய நில விபரங்களை பதிவு செய்தால், வேளான் விரைவில் மக்களை சென்றடையும்.
இந்தியா முழுவதும் இந்த இணையதளத்தில் விவசாய நில விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நில உரிமையாளர்களின் பெயர், உறவினர் பெயர், சர்வே எண், பட்டா எண், விஸ்தீரணம் நஞ்சை, புன்செய் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் அரசின் பேரிடர், வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு, பட்டுவளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை, விதை சான்றளிப்பு, வருவாய்த்துறை ஆகிய 12 துறைகளுக்கு மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்பட உள்ளது.
கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் கால தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. அப்பணிகளை உடனே விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசியதோடு, ’’நீங்கள் இப்பணிகளை முடிக்காவிட்டால் வரும் 16ம் தேதி நடைபெறும் ஜமாபந்தியில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை கையெழுத்து போடச் சொல்ல மாட்டேன்’’என கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி மிரட்டும் தொனியில் பேசி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்துறை பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் கோட்டாட்சியர் மகாலட்சுமிக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.