1150 லிட்டர் சாராய ஊரல்: தானே முன் நின்று அழித்த திருச்சி எஸ்.பி

மூன்று நாட்களுக்குள் சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி எஸ்.பி  டாக்டர் வருண் குமார்
திருச்சி எஸ்.பி டாக்டர் வருண் குமார்

திருச்சியில் 1150 லிட்டர் சாராய ஊரலை தானே முன் நின்று அழித்து திருச்சி எஸ்.பி வருண் குமார் அதிரடி காட்டி உள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற டாக்டர் வருண் குமார் அன்றைய தினம் முதல், பொதுமக்களை சந்திப்பது பொதுமக்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பது மற்றும் பொதுமக்கள் புகாருக்கென தனி அலைபேசி எண்ணை அறிவித்தது என பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து தமது துறையின் கீழ் இருந்த அதிகாரிகளுக்கும் கடிவாளம் போட்டார்.

அந்த வகையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அலுவலகங்களில் பெறப்பெற்ற 44 மனுக்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் தலைமையில், காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் மேற்படி, மனுதாரர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக விசாரணை மேற்கொண்டு 38 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டார்.

திருச்சி எஸ்.பி  டாக்டர் வருண் குமார்
திருச்சி எஸ்.பி டாக்டர் வருண் குமார்

மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி தொலைபேசி, 9487464651 எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ. வருண் குமார் தெரிவித்திருந்தார்.

மேற்படி, எண்ணுக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புலிவலம் காவல் நிலையம்- பகளவாடி பகுதியில் வயல்காட்டில் கள்ளச்சாராய ஊரல் போட்டு அவ்வப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த லோகநாதன் (வயது 50) என்பவரது இடத்தை சிறப்பு படையினருடன் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், அங்கு வயல் காட்டில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊரல் சுமார் 1150 லிட்டர், ஆறு பேரல்களை கண்டுபிடித்தார். சில லிட்டர்கள் காய்ச்சிய கள்ளசாராயமும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த லோகநாதன் கைது செய்யப்பட்டார். புகார்களுக்கு பிரத்தியோக செல் நம்பரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்த மூன்று நாட்களுக்குள் சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com