இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த அசார் என்பவர், நேற்று மாலை திருச்சி நீதிமன்றம் அருகே காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது.
ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.
'தலைநகரில் மட்டும்தான் இதை செய்ய முடியுமா, நாங்களும் செய்வோம்' என்று போட்டி போட்டுக் கொண்டு திருச்சியிலும் இந்த கூத்து சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
தமிழகத்தின் மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்து நடந்து வருகிறது. அதே நேரம், கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பலரும் youtube லைவ், facebook லைவ், சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது, பைக் சாகசத்தில் ஈடுபடுவது வரை காணொளி காட்சிகளாக பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஒட்டி லைக்குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள் இருந்த நிலையில் அவர் பதிவிட்ட அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இவரது யூடியூப் பக்கத்தில் இளைஞர்கள் பட்டாளத்தோடு அதிவேகமாக பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து அசார் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், முன்கூட்டியே தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் திருச்சி வருவதை அறிவித்த அசார், குறித்த நேரத்தில் விலை உயர்ந்த பைக்குடன் வந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் உடனே அசாரை காண குவிந்தனர்.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் தொடங்கிய பைக் ரேஸ் திருச்சி மாநகரின் பிரதான சாலையில் வழியாக இளைஞர்களின் அலறல் சத்தத்துடன் செல்ல அவரை பின்தொடர்ந்து பைக்கில் அதிவேகமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருச்சி மாநகரை சுற்றியுள்ளனர். இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்தது. இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் துறை இறுதியில் அசார் வாகனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வண்டியை பஞ்சர் ஆக்கி நிறுத்தினர்.
பின்னர் காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றதாகக்கூறி அசாருக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டது. அசால்டாக மாநகர வீதிகளில் வலம் வந்த அசாரை அலேக்காக தூக்கி அபராதம் விதித்து தன் கடமையை செய்தது திருச்சி மாநகர காவல்துறை.
- ஷானு