தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) படிக்கும்போதே, கன்னடம் மொழிப் பயிற்சியையும் திருநங்கை தர்ஷினி கற்று அசத்தி வருகிறார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்கு என்று அமைக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகமாகும், இப்பல்கலைக் கழகத்தில் மொழிப் புலம், கலைப்புலம், சுவடிப்புலம், அறிவியல் புலம், வளர்தமிழ் புலம், என பல்வேறு புலங்களின் கீழ் துறைகள் செயல்பட்டு மாணவர்கள் கல்வி பயின்றும், ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திருநங்கை தர்ஷினி (40) என்பவர் கடந்த ஆண்டில் (2021-23) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, தற்போது மேல்படிப்பாக தமிழ்ப் பல்கலைக்கழக ஒப்பிலக்கிய துறை தலைவர் முனைவர் கவிதா வழிகாட்டுதலுடன் திராவிட இலக்கியங்களில் மூன்றாம் பாலின பதிவுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற் கொள்ள உள்ளார். இதற்கான ஆணையினை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வழங்கி திருநங்கை தர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருநங்கை தர்ஷினி தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக ஒப்புதலுடன் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute Of Indian Language) 10 மாத பட்டய பயிற்சியான கன்னடம் மொழியினை கற்று வருகிறார்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கூறும்போது, திருநங்கை தர்ஷினி தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் சலுகைப்பெற்று முதுகலை பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து தற்போது முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். திருநங்கைகள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க வயதுவரம்பு சலுகை, தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதன்மூலம் மேலும் அவர்கள் கல்வி அறிவைப்பெற்று அங்கீகாரம் பெற்ற மனிதர்களாக வாழ்வார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து முனைவர் பட்ட ஆய்வாளர் தர்ஷினி கூறும்போது, திராவிட மொழிகளில் திருநங்கைகள் பற்றிய பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தேசிய தகுதி தேர்வில் (National Eligiblity Test) மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும். Junior Research Fellowship தேர்வில் வயது வரம்பை நீட்டித்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.மேலும் சிறப்பு அம்சமாக தர்ஷினி, உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு மூன்று முறை எழுதி மதிப்பெண் அடிப்படையில் சலுகை இல்லாததால்,அனைவருடனும் போட்டி போடக்கூடிய நிலை ஏற்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.