திருவண்ணாமலையில் துணிக்கடையில் நெருப்பை மூட்டி திருடிய கொள்ளையனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியான சின்ன கடை தெருவில் செயல்பட்டு வருகிறது சௌபாக்கியா ரெடிமேட் ஷோரூம். இந்த கடைக்கு தினசரி நகரில் இருந்தும், அக்கம் பக்கத்தில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் வந்து ஜவுளி வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த கடையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பக்கவாட்டு கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபாய் 18,000 ரொக்கப் பணம் மற்றும் 20,000 ரூபாய் மதிப்புள்ள துணிகளையும் திருடியுள்ளார்.
இரவு நேரம் என்பதால், கடையில் உள்ளே விளக்குகள் எல்லாம் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் இருள் பரவி இருந்தது. இதனால், கொள்ளையனால், எந்த பொருள் எங்கே இருக்கிறது என சரியாக பார்க்க முடியவில்லை.
இதனால், அந்த கொள்ளைய்ன் கடையில் வெளிச்சத்திற்காக துணியை தீ வைத்து எரிய வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளான். பின்னர், அந்த வெளிச்சத்தின் உதவியோடு கடையில் இருந்த பணத்தை திருடி விட்டு மீண்டும் அந்த நெருப்பை அணைத்துவிட்டு சென்றுள்ளான்.
இதேபோல், அருகில் இருந்த பல் மருத்துவமனை ஒன்றையும் தனது கைவரிசையை காட்டியுள்ளான். பல் மருத்துவமனையில் இருந்த ரூபாய் 40, 000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜவுளி கடை மற்றும் பல் மருத்துவனை ஆகியவற்றின் உள்ளே சென்று சோதனை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
நகரில் முக்கிய பகுதியில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.