திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இடமில்லாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்கிற செய்தி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருக்கிறது ஒழுங்கு முறை விற்பனைக்கூடம். இங்கு விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனர்.
ஆனால், அங்கிருக்கும் அதிகாரிகள், 'நெல் முட்டைகளை ஒரு வாரத்திற்கு அதாவது அடுத்த 23-ம் தேதி வரை விவசாயிகள் கொண்டு வர வேண்டாம்' என அறிவிப்பு செய்துள்ளார்கள்.
இது குறித்து விவசாயிகளிடம் பேசியபோது, 'நாங்கள் கஷ்டப்பட்டு நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் பயிர் செய்துள்ளோம்.
விற்பனைக்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் "இப்பொழுது வராதீர்கள். ஒரு வாரம் கழித்து வா" என்று சொன்னால் நாங்கள் லக்கேஜ் கொடுத்து கொண்டு வந்த மூட்டைகளை திரும்ப கொண்டு போய் மறுபடி கொண்டு வந்தால் மூன்று மடங்கு லக்கேஜ் செலவாகும்.
எங்களுக்கு வரும் லாபம் லாரி செலவுக்கே போய்விடும். நெல்லை விற்று பணம் கைக்கு வந்தால் கடன்காரர்களிடம் கொடுத்து விட்டு வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நாங்கள் எங்கள் குறைகளை எங்கே போய் சொல்வது' என்று வருத்தப்பட்டார்கள்.
விவசாயிகளின் புகார் குறித்து, நெல் விற்பனைக்கூட கமிட்டியின் கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் பேசினோம். ‘கடும் வெயில் என்பதால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் நெல் மூட்டைகளை எடை போட தொழிலாளிகளால் முடியவில்லை.
மேலும், அறுவடை இயந்திரங்கள் வந்துவிட்டதால் உடனுக்குடன் அறுவடை செய்து ஒரே நேரத்தில் எல்லோரும் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விடுகிறார்கள்.
குடோன் உள்ளே தற்போது, 15 ஆயிரம் மூட்டைகள் உள்ளது. வெளியே பத்தாயிரம் மூட்டைகள் உள்ளது. இதனால் தேங்கியிருக்கும் மூட்டைகள் இந்த வாரத்தில் போய்விடும். அதனால் தான் இப்படி சொன்னேமோ தவிர விவசாயிகளை வஞ்சிக்க அப்படிச் சொல்லவில்லை’ என்றார்.
- அன்பு வேலாயுதம்