திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்கியம். தம்பதியின் 9 வயது மகள் டானியா. சிறுமி அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிறுமி டானியாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறுமி தற்போது குணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி டானியா திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவச் செலவுக்கு நிதி வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிறுமி டானியாவின் பிறந்த நாள் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தன்னுடைய அலுவலகத்தில் உள்ள இருக்கையில் அவரை அமர்த்தி, கேக் வெட்டி கொண்டாடினர்.
இதன் பின்னர் மருத்துவ செலவுக்காக 50,000 ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. சிறுமியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்திய மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.