திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூரில் மளிகை கடை மற்றும் எலக்ட்ரிகல்ஸ் கடை வைத்திருந்தவர் தியாகராஜன் ரெஜினா தம்பதி.
இவர்கள் அப்பகுதியில் உள்ள செய்யாறு, வெம்பாக்கம், பிரம்மதேசம், அரசூர், குத்தனூர், ஆவனியாபுரம், காகனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை மாதாந்திர சீட்டு நடத்துவதாக பணம் வசூலித்தனர்.
ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு முறையாக பணத்தை கொடுத்து வந்த தியாகராஜனும், ரெஜினாவும் அதன் பிறகு, சீட்டு எடுத்தவர்கள், சீட்டு முடிந்தவர்களுக்கு சீட்டு பணத்தை கொடுக்காமல், ஏன் வீணாக செலவு செய்கிறீர்கள். எங்களிடமே இருக்கட்டும். வட்டி கொடுக்கிறோம் என்று சொல்லி கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருக்கின்றனர்.
பொறுத்துக்கொள்ள முடியாத சீட்டு கட்டியவர்கள் அவர்களிடம் பணத்தைக் கேட்க, இருவரும் இரவோடு, இரவாக தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் ஒரு கடையில் தியாகராஜனும், ரெஜினாவும் குளிர் பானம் குடித்து கொண்டிருந்தனர். செய்யாறு பகுதியைச்சேர்ந்த சீட்டு கட்டி ஏமாந்த சிலர் அந்தப் பக்கம் போகும் போது அவர்களை பார்த்து இருக்கின்றனர். உடனடியாக எல்லோருக்கும் செல்போனில் தகவல் கொடுத்தனர். மோசடி செய்த தம்பதியை மடக்கி காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். போலீசார் அவர்களிடம் புகார்களை பெற்றுக் கொண்டு செய்யாறு கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அதன்பிறகு கோர்ட் உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சீட்டு கட்டி ஏமந்தவர்களே மோசடி செய்தவர்களை பிடித்து கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-அன்பு வேலாயுதம்