காதலன் தற்கொலை செய்துக் கொண்டதால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்
பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் டில்லி(47), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சாந்தி(42), இவர்களது மகள் நந்தினி(16), இவர் பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த நந்தினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் நந்தினி திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்ததில் நந்தினி தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து போன நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தேவா இறந்து போன தகவல் அறிந்த நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.