’’அதிகாரிகளே நான் உயிருடன் தான் உள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ் ரத்து செய்யுங்கள்’’ எனக்கோரி தனது இறப்புச் சான்றிதழுடன் அரசு அலுவலங்களில் தினந்தோறும் காத்திருக்கிறார் முதியவர் ஒருவர்.
ஆம்பூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவருக்கு அவரது குடும்பத்தினர் இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளனர். காணாமல் போனவர் 10 மாதங்களுக்கு முன் திரும்பி வந்த நிலையில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ள நிலையில் தீர்வுக்காக பல மாதங்களாக முதியவரை அரசு அதிகாரிகள் அலைகழித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சின்னமலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆம்பூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். குடும்ப சூழ்நிலைக் காரணமாக சீனிவாசலு 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சீனிவாசலு பல ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது இறந்து விட்டதாகக் கூறி ஆம்பூர் நகராட்சியில் சீனிவாசலுவின் இறப்பு சான்றிதழை வாங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 28 -ம் தேதி சீனிவாசலு சின்னமலையாம்பட்டு பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு சீனிவாசலு இறந்து விட்டதாக சான்றிதழ் பெற்றது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசலு உயிருடன் தான் உள்ளேன். என் பெயரில் வழங்கப்பட்டுள்ள இறப்புச் சான்றிதழை ரத்து செய்யுமாறு கிராம நிர்வாக அலுவலர் முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக அதிகாரிகள் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் ஏதும் அளிக்காமல் தன்னை அலைக்கழிக்க வைப்பதாக சீனிவாசலு குற்றஞ்சாட்டி அனைத்து அரசு அலுவலங்களிலும் தினமும் காத்துக் கிடக்கின்றார். இது குறித்து மலையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் கேட்டபோது, ’’மனு மீதான பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து விடுவோம்’’ எனத் தெரிவித்தார்.
மேலும் இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் இறந்தவர் உயிருடன் இருப்பதாக கூறி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களுக்கு முதியவரை அலைய வைக்கும் நிகழ்வு ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.