தேனியில் ரயில்வே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி நகரில் உள்ள சிவராம் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜன் என்பவரின் மகன் சிவகாந்தனும். அதேபோல தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் வீரராகவன். இவர்கள் தேனியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
பள்ளி நண்பர்களான இவர்கள் தேனி ரயில்வே நிலைய பகுதியில் ரயில்வே துறை சார்பாக சேமிப்பு கிட்டங்கி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக அங்கு மிகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தேனி பகுதியில் பெய்த கன மழையில் காரணமாக இந்த பள்ளத்தில் நீர் நிரம்பி குளம் போல உள்ளது. இந்த இடத்தில் குளிப்பதற்காக சிவசாந்தன் மற்றும் வீரராகவன் ஆகிய இருவரும் நேற்று மாலை சென்றனர்.
இரவு முழுவதும் இவர்கள் வீடு திரும்பாததினால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குளத்தின் கரையில் அவர்கள் பயன்படுத்திய சைக்கிள் இருப்பதை கண்டு குளத்தில் விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
நேற்று இரவு வரை தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை நடைபெற்றது, அப்போது இரண்டு மாணவர்களும் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.