ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது கலவை பேரூராட்சி. நேற்றிரவு கலவை பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி செல்வதற்கு மழையூர் கிராமம் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்தை நாயுடு மங்கலம் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்னும் ஓட்டுநர் ஓட்டிச்சென்றார். அப்போது பேருந்து பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் ஓவர்டேக் செய்ய வழி விடச்சொல்லி ஹாரன் அடித்தபடியே வந்தார். பேருந்து ஓட்டுநர் சாலை குறுகியதாகவும், இருட்டாகவும் இருந்தால் சிறிது தூரம் சென்று வழி விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், வாகனத்தை திடீரென்று பேருந்தின் குறுக்கே நிறுத்திவிட்டு பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். அத்தோடு ஓட்டுனரிடம் சண்டை பிடித்தார். அரசுப் பேருந்து ஓட்டுநர் குமரவேல் கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அந்த வாலிபர் கண்ணாடியை உடைத்தது செல்போனில் வீடியோ எடுத்திருந்த சிலர் போலீசாருக்கு அனுப்பினர். அதில், பேருந்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனரிடம் தகராறு செய்தது கலவை புதூர் பகுதியைச் சேர்ந்த வாசு என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாசுவை தேடி வருகின்றனர். வழி விடாததற்கு கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-அன்புவேலாயுதம்