'வக்கில்லாத காவல்துறை' என கோஷம்- டென்ஷனான போலீஸ் -தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு

காவல்துறையினரை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழுத்து சென்ற போலீஸ்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழுத்து சென்ற போலீஸ்

பழனியில் நடைபெற்ற போராட்டத்தில் ’வக்கிலாத காவல்துறை’ என கோஷம் எழுப்பியதால் கடுப்பான காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச்சென்று கைது செய்தனர்.

பழனியில் ஆளுநர் வருகையின்போது கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறி காவல்துறை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த 24ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பழனி மலைக்கோவில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியுடன் வருகை தந்த போது பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்ய இழுக்க முயன்ற போது பாஜகவினருக்கும், காவல்துறைனருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் பாஜகவினரையும் மற்றும் கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்தியா கூட்டணி சேர்ந்த கட்சியனரையும் கைது செய்து தனித்தனியே திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர்.

இது சம்பந்தமாக காவல்துறையினர் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சியை உட்பட 90 பேர் மீது வழக்கும், பாஜகவினர் மீது 117 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சில நாட்களுக்கு முன்பு சிவில் பிரச்சனையில் சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையத்தில் வரவு, செலவு பஞ்சாயத்து செய்வது, மாவட்ட முழுவதும் கொடிகள் கட்ட அனுமதித்தாலும் பழனியில் தடைச் சட்டம் போட்டது, பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக சில அமைப்புகள் மட்டும் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பது, மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அமைப்புகளின ஊர்வலத்திற்கு தடைவிப்பது உள்ளிட்ட காவல்துறையினர் தொடர்ந்து ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் காவல்துறையினரை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "வக்கில்லாத காவல்துறை "என்று கூறியதால் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக இழுத்துச்சென்று கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com