காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாள்தோறும் தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் இருக்கும் குப்பையை தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு மிக கடினமாக உள்ளதாகவும், இதுகுறித்து பல தடவை நீர் நிலைகளில் குப்பை வீச வேண்டாம், கழிவுகளை கொட்ட வேண்டாம் என காஞ்சிபுரம் மாநகராட்சி தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வந்த நிலையில், இதனை சற்றும் பின்பற்றாமல் குப்பைகளை கொட்டுவதை பொது மக்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கேட் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வந்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தனது வாகனத்தில் இருந்து குப்பையை எடுத்து அருகில் இருந்த வேகவதி ஆற்றில் அதனை வீசினார்.
இதனைக் கண்ட மாநகராட்சி ஊழியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு குப்பை போட்டது தவறு எனவும் இதுபோன்று செய்யலாமா எனவும் கேட்டு உடனடியாக அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு தன்னிடம் 100 ரூபாய் மட்டுமே உள்ளதாக கூறியதால் அந்த நபருக்கு 100 ரூபாய் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து இனி இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தினர்.
இச்சாலை வழியாக சென்ற பொதுமக்கள், இதேபோல் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் சில மணி நேரம் நின்றிருந்தால் இதேபோல் குப்பைகளை கொட்டும் பல்வேறு நபர்களை பிடிக்கலாம் எனவும், மாநகராட்சியின் இத்தகைய செயலை வரவேற்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.