விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம்!

கழிவுநீர் தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி

ஆவடியில் தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 7ம் தேதி ஆவடி மத்திய அரசு குடியிருப்பு பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தேவன், மோசஸ் ஆகியோர் குறித்து கலந்தாய்வு செய்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டார். பின்பு, செய்தியாளர்களை சந்தித்த தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பேசியதாவது,

ஆய்வு மேற்கொண்ட வெங்கடேசன்
ஆய்வு மேற்கொண்ட வெங்கடேசன்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கழிவுநீர்த் தொட்டிகளுக்குள் இறங்கும்போது விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க இப்பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், உயிரிழந்வர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ஓசிஎப் நிறுவனம் சார்பாக நிவாரணத் தொகை தலா ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் மேலும் நிவாரணத் தொகையை ரூ.5 லட்சம் உயர்த்தி ரூ.15 லட்சமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஓசிஎப் நிர்வாகம் ஒப்புதல் அளித்து, வருகின்ற 22ம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு
வெங்கடேசன் செய்தியாளர்கள் சந்திப்பு

இதில் உயிரிழந்த மோசஸ் குடும்பத்தினருக்கு, ஓசிஎப் நிறுவனம் மற்றும் மாநில அரசுதுறை சார்ந்த நிறுவனங்களிலிருந்தும் மொத்தமாக ரூ.34 லட்சமும், அதே போன்று தேவன் குடும்பத்தினருக்கும் ரூ.24 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com