சேலத்தில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் 13 சவரன் நகை மற்றும் 10 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் சின்ன கொல்லப்பட்டி ஜிகேவி நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது மனைவியுடன் தனியாக வசித்து வரும் இவர் மாதம்தோறும் பௌர்ணமி நாளன்று விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம்போல நேற்று கோவிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 6 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர்.அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த 13 சவரன் நகை மற்றும் 10 லட்சம் கொள்ளை அடித்து விட்டு,வீட்டிலிருந்த மிளகாய் பொடியை எடுத்து வீடு முழுவதும் கொள்ளையர்கள் தூவி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்ததின்பேரில் சம்பவம் இடம் வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் வீட்டின் வெளியே இருந்த கடப்பாரையை எடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளைடித்துவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.