போதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்கத்தலைவரின் கார் அடுத்தடுத்து மோதியதில் மிதி வண்டியில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் நிறுத்தாமல் சென்ற காரை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த எரவாஞ்சேரி ஊராட்சி மேல ஒதியத்தூரைச சேர்ந்தவர் காவிரி தன்பாலன். இவர் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக உள்ளார்.
இவரது மகனும் அவரது நண்பர்கள் இருவரும் குடிபோதையில் காரை எடுத்துக் கொண்டு கீழ்வேளூரிலிருந்து நாகை நோக்கிச் சென்றுள்ளனர்.
பொலிரோ காரை குடி போதையில் தறிகெட்டு ஓட்டியதில் நாகையிலிருந்து மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த 34 வயதான வெங்கடேஷ் என்பவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அடுத்து ஸ்கூட்டியில் வந்த மஞ்சக்கொல்லைய சேர்ந்த கண்ணன் மீது மோதியதில் அவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்தவரை பொது மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைத்தனர். தொடர் விபத்துகளை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற காரை 2 கிலோ மீட்டர் வரை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். அப்போது காரை ஓட்டிவந்த காவிரி தனபாலன் மகனும் அவரது நண்பர்களும் காரை நிறுத்திவிட்டு இறங்கித் தப்பி ஓடியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த கீழ்வேளூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் உயிரிழந்த வெங்கடேஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வெங்கடேஷின் மனைவி சடலத்தைப் பார்த்துக் கதறி அழுது மயங்கி விழுந்தது காண்பவரைக் கண்கலங்க வைத்தது. குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்றதால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சாலையில் திரண்டு விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.