தஞ்சாவூர் அருகே தி.மு.க பிரமுகரை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் தங்க. அண்ணாமலை (55). மாற்றுத்திறனாளி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா என்பவர், அண்ணாமலை போட்டு இருந்த வேலியை சேதபடுத்தி, அண்ணாமலை குடும்பத்தினரை தரக்குறைவாக ஜாடையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அண்ணாமலை 'ஏன் இப்படி திட்டுறீங்க?' என கேட்டதாக கூறப்படுகிறது. இதில் வாய் தகராறு எற்பட்டு, ஆத்திரமடைந்த சபாபதி மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர், அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், அண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அண்ணாமலையை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார்.