தமிழ்நாடு அழிவை சந்திக்கப் போகிறது' - பி.ஆர். பாண்டியன் காட்டம்

தமிழக அரசின் செயல்பாடுகள் ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக விவசாயிகள் சார்பில் அறவழிப்போராட்டம் நடத்தப் போவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அழிவை சந்திக்கப் போகிறது' - பி.ஆர். பாண்டியன் காட்டம்

மதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசுகையில், "கடந்த 2021-ஆம் ஆண்டு, திமுக நெல்லுக்கு ரூ.2,500, ரூ,4,000 வழங்குவேன் என்று சொன்னதை தற்போது நிறைவேற்ற மறுக்கிறது. மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதற்கான எந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு, நிதி ஆதாரமில்லை என கை விரிக்கிறது. காவிரி, வைகை, முல்லைப் பெரியாறு ஆறுகள் வறண்டுவிட்டன. ஒட்டு மொத்த தமிழ்நாடும் உணவு உற்பத்தியில் அழிவைச் சந்திக்கும் பேராபத்து நெருங்குகிறது. தமிழக முதல்வர் இதுவரை எந்த ஒரு கருத்துக்கேட்புக் கூட்டங்களோ அல்லது அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் கூட்டங்களோ நடத்தவில்லை.

தக்காளி விலை உயர்வைக் காரணம் காட்டி, ஒட்டு மொத்த தமிழகத்தையும் திசை திருப்புவதற்கு ஒன்றுகூடி முயற்சி எடுக்கிறார்கள். நூற்றுக்கணக்கான காய்கறிகளில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான் தக்காளி. எந்தவித மருத்துவகுணமும் அதில் கிடையாது. தக்காளி இல்லாமல் வாழ முடியும். அரிசி இல்லாமல் வாழ முடியாது. இதனைத் தமிழக அரசு இதுவரை உணரவில்லை. ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

கனிமவளக் கொள்ளைகள் தீவிரமடைந்திருக்கின்றன. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து இங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. அதன் மூலம் வருகின்ற வருவாயை அப்பகுதியிலுள்ள பாசனங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள் என்று கோருகிறோம். ஆனால், சாலைகள் அமைக்க மட்டும்தான் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஒட்டு மொத்த விளைநிலங்களையும் அபகரித்து சிப்காட் உருவாக்குகிறோம் என்ற பெயரில் விவசாயிகளை போராட்டக்களத்தில் தள்ளியிருக்கிறது. விவசாயிகளின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு, நீர்நிலைகளை சூறையாடுவதற்குத் தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ சட்டப்பேரவையில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆளுநர் அதில் கையெழுத்திடக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அந்த சட்டத்தை நிறைவேற்றத் தமிழக அரசு தொடர்ந்து முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, சட்டவிரோதமாக ஆய்வுக்குழு அமைத்திருக்கிறது. அதுகுறித்து முதல்வர் கண்டிப்பதற்கு முன்வரவில்லை. மத்திய அரசும் கண்டிக்கவில்லை. அவசரமாக ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். ஆனால் தமிழக அரசு அதற்கான கடிதத்தைக்கூட ஆணையத்திற்கு எழுதவில்லை. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்குத் தீர்வு காண முதல்வர் உடனடியாக முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களுக்கு உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்கூட முன்வரவில்லை. இதுவரை முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 132 அடிக்கு மேல் உயரவில்லை. ஆகையால், வைகை பாசனப்பகுதி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தமிழக விவசாயிகள் சார்பாக அறவழிப் போராட்டத்தைத் துவங்குகிறோம்.

கடலூர் என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்படுகிறது. பயிருடன் கூடிய விளைநிலத்தை அழித்ததை உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட, என்.எல்.சியின் தலைவர் பணியில் நீடிப்பதைக் கண்டிக்கிறோம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வேளாண் பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடே கிடையாது. கலைஞர் கிராம விவசாய வளர்ச்சித் திட்டம் என்று அறிவித்தார்கள். முதல் ஆண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. வேளாண்மைத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இன்றி மொத்தமாக முடங்கிக் கிடக்கிறது. பத்திரப்பதிவுத் துறையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கூட விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com