மர்ம நபர்களால் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்த கந்தன் என்பவரது மகன் சண்முகசுந்தரம் (வயது 65). இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக இருந்தவர்.
இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனை அடுத்து 2-ம் தாரமாக ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சண்முகத்தின் 2வது மனைவி அவருடன் கோபித்துக் கொண்டு கடந்த 15 நாளுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சண்முகம் மட்டும் எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.
தனியாக வசித்து வந்த சண்முகத்திற்கு அவருடைய அக்கா மூன்று வேலையும் உணவை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். நேற்று இரவு சண்முகத்தை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை அவருடைய அக்கா வழக்கம் போல உணவு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தபோது, தம்பி சண்முகம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து சிறுகனூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் சோதனை நடத்தினர். இதற்கிடையில் படுகொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? கொலை செய்த மர்ம கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.