செந்தில் பாலாஜி வழக்கு: ‘நாளை வாதத்தை நிறைவு செய்ய வேண்டும்’ - உச்சநீதிமன்றம் உத்தரவு

‘செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை நாளை நிறைவு செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு: ‘நாளை வாதத்தை நிறைவு செய்ய வேண்டும்’ - உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.

மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் சட்டப்பூர்வமானது என கூறியதோடு, குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்றும் தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த இந்த உத்தரவினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார்.

அதே நேரம் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று நீதிபதி நிஷா பானு கூறினார்.

மேலும், ‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பிறகு நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்?’ எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில் ‘அமலாக்கத் துறையினர் காவல் துறை அதிகாரிகள் கிடையாது.

அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ‘ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலம் பெற்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும்?

அமலாக்கத் துறையால் நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரை கைது செய்ய முடியுமா? மாறாக, காவல் துறையினர்தான் கைது செய்ய முடியும்’ என வாதிட்டார்.

மேலும் புகார்தாரர் அளித்த விவரங்களையே ஆதாரங்களாக முன்வைத்த பிறகும் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ளது? தேவைப்பட்டால் சிறைக்கு சென்று குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கலாமே தவிர அமலாக்கத்துறை காவல் கோருவது முறையாக இருக்காது’ என்று, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ‘சட்டத்தில் இல்லாததை அமலாக்கத்துறையினர் கோர முடியாது. வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கவும் முடியாது’ என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வாதங்களை நாளைக்குள் நிறைவு செய்யுமாறு செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com