இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இயங்கிவரும் மதரஸாவில் அரபி பாடம் கற்றுத்தரும் ஆசிரியராக கடந்த 2019 ஆம் ஆண்டு பணிபுரிந்தவர் சாகுல் அமீது (43). இந்நிலையில் இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி தன்னிடம் அரபி கற்க வந்த இளையான்குடியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மீது ‛சைத்தானை ஏவிவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால், பயந்த சிறுவனை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் இதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதிர்ந்து போன பெற்றோர் , சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சாகுல் ஹமீது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்குக்கான விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட சாகுல் ஹமீதுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்