கடலூர் மாவட்டம், சிதம்பரம் வைப்புச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் விக்னேஷ் (26). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் செல்போன் செயலி மூலம் தூத்துக்குடி, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருப்பசாமி [எ] கார்த்திக், மணிராஜ், சிதம்பரம் நற்கந்தன்குடியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
மேலும் அவர்கள் நெருங்கிப் பழகியதோடு, அடிக்கடி தகவல் பரிமாற்றமும் செய்து வந்துள்ளனர். இனி நடந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் விசாரித்தோம்.
”சிதம்பரம் விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி கருப்பசாமி, மணிராஜ் ஆகியோரை தொடர்பு கொண்ட பிரகாஷ் தன் நண்பனான சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவன் உங்களை பார்க்க ஆசைப்படுகிறான்’ என்றபடி சிறுவனது போட்டோவை பகிர்ந்துள்ளார்.
உடனே அந்த மூவரும் ’ஆளரவமற்ற இடமாக இருக்கவேண்டும். அப்படி ஒரு இடத்தை தேர்வு செய்துவிட்டு சொல்லுங்கள். சந்திப்போம்’ என்று சொல்லி இருக்கின்றனர். உடனே ”அனைவரும் சீர்காழி வந்துவிடுங்கள். அங்கே இடம் இருக்கிறது. நானும் சிறுவனுடன் வந்துவிடுகிறேன்’’ என்று பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த மாதம் 9ம்தேதி தூத்துக்குடியில் இருந்து கருப்பசாமி, மணிராஜ் ஆகியோர், சிதம்பரம் விக்னேஷ் மற்றும் பிரகாஷ், சிறுவன் ஆகியோர் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் ஒன்று சேர்ந்து அறிமுகம் செய்துகொண்டுள்ளனர்.
5 பேரும் இரவு 9 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் சீர்காழியை அடுத்த உப்பனாறு பாலம் அருகே உள்ள ஆளரவமற்ற காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
பின்னர் தாங்கள் வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்படும் நேரத்தில் விக்னேஷ் மட்டும் மது போதையில் இன்னும் சில மணி நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என, தகராறு செய்துள்ளார்.
மது போதையில் ரகளை செய்யவே ஆத்திரமான நால்வரும் விக்னேஷை தாக்கியிருக்கின்றனர். அத்துடன் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஷின் செல்போன் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை எடுத்துக்கொண்டுள்ளனர்.
பின்னர் நம்பரையும் வாங்கிக்கொண்டு மது போதையில் இருந்த விக்னேஷை அங்கேயே விட்டுவிட்டு 4 பேரும் எஸ்கேப் ஆகியிருக்கின்றனர். ’நாங்கள் அனைவரும் பயங்கர கொலைகாரர்கள். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம்’ என்று சொல்லவே போதை தெளிந்து எழுந்து அதிகாலை வீட்டுக்கு திரும்பிய விக்னேஷ் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துவந்துள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் தனது நண்பரிடம் சொல்ல, அதன் பின்னர் இதுகுறித்து விக்னேஷ், சீர்காழி காவல்நிலையத்திற்கு வந்து ‘ஓரினச்சேர்க்கை’ என்பதை மறைத்து சமூக வலைதளங்களில் நண்பர்களாக பழகினோம்.
என்னை வரவழைத்து மது போதையில் தாக்கி செல்போன், ஏ.டி.எம் கார்டுகளை பறித்துக் கொண்டதோடு, ஏ.டி.எம் கார்டு மூலம் வங்கிக் கணக்கிலிருந்த 70,000 ரூபாயை எடுத்துக்கொண்டனர்” என்று புகார் கொடுத்துள்ளார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் தூத்துக்குடி பகுதியைச்சேர்ந்த கருப்பசாமி, மணிராஜ், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சிறுவன் உள்பட 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்