செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் - செப்.15 வரை காவல் நீட்டிப்பு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தினார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.அவரை கைது செய்தது சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின், 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கை பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி ஆகஸ்ட் 17ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி (ஆகஸ்ட் 25) நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி காட்சி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 28)இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து நீதிபதி விசாரித்தார். பின்னர், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை நகல்கள் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி கடந்த 2 மாதங்களாக நீதிமன்ற காவலில் இருப்பதால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com