செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு- ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என உயர்நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று வர சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை கைது செய்தது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின், 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

சிறப்பு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து விட்டதால் கடந்த 2 மாதங்களாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய செந்தில் பாலாஜி தரப்புக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று வர அறிவுறித்தினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com